தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் நிலையில், இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுகவில் சிலர் கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் இன்று காலை தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது’ என்றும் தெரிவித்தார்.