தமிழக செய்திகள்

"நீட் வேண்டாம்: மாணவர்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது" - கனிமொழி எம்.பி

சென்னையின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவு தெரிவித்தார்.

சென்னை,

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டக் களம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

கனிமொழி

இந்நிலையில், சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒன்றிய அரசாங்கத்தை யாருமே எதிர்க்க முடியாது என்று நம்பிய ஒரு ஆட்சியை எதிர்த்துப்போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி, இந்த நாட்டுக்கே நீங்கள் அனைவரும் வழிகாட்டியாக மாறி உள்ளீர்கள். எந்த இடத்தில் போராட்டம் நடந்தாலும், அவர்களை ஒன்னும் பண்ண முடியாது, அவர்களை யாரும் அசைக்க முடியாது, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. நாங்களே நாடாளுமன்றத்தில் பல நாட்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டிருப்போம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வாசலில் உட்கார்ந்து இருக்க வேண்டிய நிலைமை எல்லாம் சந்தித்துள்ளோம்.

போராட்டம்

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கக்கூடிய ஒரு ஆட்சி இருக்கும் என்றால், அது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜகவின் ஆட்சிதான். நாங்கள் எல்லோரும் கேட்க முடியாதது, நாங்க எல்லோரும் செய்ய முடியாதது, அவர்களின் இடத்துக்கு போய் பார்க்க முடியாத சூழல் இருந்தது ஆனால் நேற்று டெல்லியிலே ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களைப் பார்ப்பதற்காக பாஜக அரசு முன்வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அது உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும், நீட் வேண்டாம் என்று முதன் முதலில் வந்த எதிர்ப்பு குரல் தமிழகத்திலிருந்து வந்த குரல்தான். நீட் இருக்கக்கூடாது என நீதிமன்றத்திற்குப் போனவர் நமது சகோதரி அனிதா என்ற மாணவி. அதன்படி நாம் ஆரம்பித்த போராட்டம், இன்றைக்கு நாடு முழுவதும் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. மாணவர்கள் டெல்லியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலேயும் நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைசிறந்த மருத்துவர்கள்

நாங்க படித்துவிட்டு செல்கிறோம், ஆனால் வினாத்தாள் வெளியாகிறது என்றால் நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை. இந்த தேர்வு அப்படின்னு போராடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலைத் தாண்டி, இங்கே பேசிய மாணவர் சொன்னது போல, நம்ம படிக்கிற பாடம் வேற, நம்ம பள்ளியில படிக்கக்கூடிய விஷயங்கள் வேற, நீங்க பரீட்சை வெச்சு எங்களை கேட்கிற கேள்விகள் வேறயாக உள்ளது. ஆனால் இதுவரைக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல நாடுகளில், பல பெரிய மருத்துவமனைகளில் தமிழ்நாட்டிலிருந்து பயின்று சென்ற மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் எல்லாரும் கொண்டாடக்கூடிய இடத்தில் இருக்காங்க. அவர்கள் எந்த நீட் தேர்வையும் எழுதி பாஸ் செய்து மருத்துவராகவில்லை. இன்றைக்கு நாடு முழுவதும் இருக்கக்கூடிய மிகச்சிறந்த, தலைசிறந்த மருத்துவர்கள் வந்து தமிழ்நாட்டிலிருந்து கல்வி பயின்றவர்கள். அவர்கள் யாரும் நீட்டெல்லாம் தாண்டி வரவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அப்போது மருத்துவத்துறை மீது ஆர்வம் இருந்தவர்கள் படித்தார்கள்.

நீட் வருவதற்கு முன்பு யாருக்கெல்லாம் மருத்துவர்கள் ஆக வேண்டுமோ, மக்களைச் சந்திக்க வேண்டுமோ, உதவி செய்ய வேண்டுமோ, அவர்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். ஆனால் இப்போது யாருக்கெல்லாம் வசதி வாய்ப்பு இருக்கிறதோ, யாரெல்லாம் கோச்சிங் சென்டருக்குப் போக முடியுமோ, அவர்கள்மட்டும் இன்னைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக போகக்கூடிய ஒரு சூழலை இந்த நீட் தேர்வு முறை உருவாக்கியுள்ளது. அதனாலதான் தொடர்ந்து, நீட்டை தடை செய்யுங்கள், நீட் வேண்டாம் என்கிறோம்.

டெல்லியில் நடக்கக்கூடிய போராட்டத்துக்கும், நமக்கும் இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவெளி அதுதான். நாம் நீட் தேர்வே வேண்டாம் என்கிறோம், அவர்கள் நீட் தேர்வை ஒழுங்கா நடத்துங்கள் என்கிறார்கள். நீட்டை நடத்தக்கூடிய அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். நேற்று வரைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, இன்றைக்கு மறுபடியும் வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நிச்சயமாக வழிக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் இருக்கிறது.

ஆளுநர் கையெழுத்து

தொடர்ந்து நீட்டை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதுமே தமிழ்நாடு ஹிந்தியை திணிக்காதீர்கள் என சொல்ல நினைத்தால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தமிழ்நாடு ஏதோ தனியாக பேசுவதாக எண்ணுவார்கள். சிறிது காலத்தில், தன்னுடைய மொழி தன்னிடம் இருந்து பறிக்கப்படும் பொழுது அதை உணர்ந்து கொண்டு ஹிந்தி வேண்டாம் என நாடு முழுவதும் நமது கருத்தை எதிரொலிக்கும். அதேபோல தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைக்கு வரைக்கும் நீட் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது சட்டமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதனை ஏற்று ஆளுநர் கையெழுத்து போடவில்லை. நம் மாநிலத்தின் நலம் சார்ந்து எதை அனுப்பினாலும் கையெழுத்து போட மாட்டார்கள். அதன் பின் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கையெழுத்து போட்டு இப்போது டெல்லியில் தூங்குகிறது.

இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அங்கே இருக்கக்கூடியவர்கள், மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீட் வேண்டாம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அவ்வாறு உணரவில்லை என்றால் தமிழ்நாடு அதை உணர வைக்கும். டெல்லியில போராட கூடிய மாணவர்கள் தடியடியை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் பலபேர் இன்றைக்கு சோசியல் மீடியாவில் பேசும்போது பார்க்கிறோம். நாங்க சக போராட்டக்காரர்களுடன் இருக்கும்போது தான் பாதுகாப்பாக உணர்கிறோம். அங்கே இருக்கக்கூடிய காவல்துறையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. எங்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு சூழல் உள்ளது என கூறுகிறார்கள்.

மேலும், எங்களை பாதுகாக்க வேண்டியவர்களை பார்த்தால் எங்களுக்குப் பயமாக இருக்கிறது என்று அங்கே போராடக்கூடிய பெண்கள் சொல்லக்கூடிய ஒரு நிலை மிகவும் கவலை அளிக்கிறது. மாணவர்கள் எந்த அளவுக்குத் தாக்கப்பட்டார்கள் என்பதை நம்ம பார்த்தோம். ஆனால் அதையும் அசால்ட்டாக டீல் செய்யக்கூடிய மாணவர்களை நாம் அங்கு தான் சந்தித்தோம். நீங்கள் மாணவர்களை விரட்ட தண்ணீரை பாய்ச்சினால், அதில் நடனம் ஆடுகிறார்கள். அதனால் இந்த இளைஞர்கள் கூட்டத்தை யாராலும் வெற்றி பெற முடியாது. அதை இன்று ஒன்றிய அரசாங்கம் உணர்ந்து இருக்கும். யாருக்காகவும் இறங்கி வரமாட்டோம், யாருடைய கோரிக்கைக்கும் செவி சாய்க்க மாட்டோம் என்ற மமதையில் இருந்த பாஜகவை இறங்கி வர வைத்ததே உங்களுடைய பெரிய வெற்றி எங்களுக்குக் காது கிடையாது என கூறிய ஒன்றிய அரசாங்கம், உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கக்கூடியதே பெரிய வெற்றி. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இங்கே நிறைய கோரிக்கைகள் தற்போது இருக்கக்கூடிய ஆட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மெரினாவைத் திறந்து விடுங்கள், போராட விடுங்கள். தமிழ்நாட்டிலும் நீட் வேண்டாம் என்று தொடர்ந்து போராடக்கூடிய சூழலில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள், மதுரையில் போராடிய மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் இருக்கிறோமா தமிழ்நாட்டுல இருக்கிறோமா என தெரியாத அளவிற்கு மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இங்க கைதுகள், அச்சுறுத்தல்கள், போராடுறதுக்கு இடம் இல்லாம இந்த இடத்துல எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இங்கேயே போராட வேண்டும் என்ற நிலையுள்ளது.

வாழ்த்துக்கள்

அதனால் மாணவர்களுடைய நியாயமான போராட்டம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை எதிரொலிக்கக்கூடிய இந்தப் போராட்டத்திற்கு, அரசு துணை நிற்க வேண்டும். அதை இங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யார் உங்களோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களோடு நிற்போம். நீங்கள் இங்க போராடினாலும் நிற்போம், வேறு எந்த இடத்தில் போராடினாலும் உடன் நிற்போம். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும் உங்களோடு எப்பொழுதும் நிற்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இங்கே போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.