சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதன்பின் கூட்டத்தில் பேசிய அவர், அகில இந்திய அளவில் கலைஞர் படைத்த சரித்திரத்தினை யாராலும் படைக்க முடியாது என கூறினார்.
தொடர்ந்து அவர், 14 வயதிலேயே சமூக பணியில் ஈடுபட்டு மக்களை சீரிய சிந்தனைக்கு அழைத்து வந்தவர். இந்திய ஒருமைப்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டவர்.
5 முறை முதலமைச்சர், சட்ட பேரவை தேர்தலில் ஒருமுறை கூட தோற்காதவர் என்ற பெருமையை பெற்றவர். பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என தமிழகத்தில் தேர்தலின்பொழுது அறிவித்தவர். பீகாரில் பூரண மதுவிலக்கால் விபத்துகள், குற்றங்கள் குறைந்துள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக மகளிர் மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்தி தந்தவர். பஞ்சாயத்து அமைப்புகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் என கூறினார்.
தேசிய தலைவர்கள் பலரும் வைரவிழாவில் பங்கேற்றதனால் இந்தியாவில் கருணாநிதிக்கு இருக்கும் நன்மதிப்பு தெரிய வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தின் முதல் அமைச்சராக மு.க. ஸ்டாலின் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.
அனைத்துவித அரசியல் அனுபவங்களையும் ஸ்டாலின் பெற்றுள்ளார். தமிழகத்திற்கு தலைமை தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.