தமிழக செய்திகள்

கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை - முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்

கரூரில் அமையவிருக்கும் ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் விஜய் சென்றுள்ளார். இன்று காலை அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் நினைவாக கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். Everan Kothari நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலை கிடைக்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.