சென்னை,
தமிழக அரசு கடந்த 1985-1987ம் ஆண்டுகளில் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்துசமய அறநிலைய துறைக்கு சொந்தமாக இருந்ததாக கூறியிருந்தது. இதன்பின்னர், கடந்த 2018-2019ம் ஆண்டில் 4.78 லட்சம் ஏக்கராக உள்ளது என கூறியது. இதனால் காணாமல் போன நிலத்தை கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2019-2020ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில், கட்டிடங்கள் அமைந்துள்ள நிலம் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் குறிப்பிடப்படாததால், ஏக்கர் குறைந்துள்ளதே தவிர, நிலம் எதுவும் காணாமல் போகவில்லை என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.
அதனுடன், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நில விவரங்களை ஆவணங்களுடன் தாக்கல் செய்ய, செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பணிகளை முடித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் தேவை என்றும் அறநிலையத்துறை கோரியுள்ளது.