தமிழக செய்திகள்

2026 ஜனவரிக்குள் வடசென்னை வளர்ச்சி பணிகள் 75 சதவீதம் முடிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, வால்டாக்ஸ் தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய குடியிருப்புகள், புதிய சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டுத் திடல் மேம்படுத்துதல், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்பு பணிகளை அமைச்சர் சேர்கர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

"தமிழக அரசு, வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து கடந்த 2024-ம் ஆண்டு ரூ.1,000 கோடி என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் என்று ரூ.6,000 கோடியை தாண்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு, அந்த திட்டங்களுக்கு தொடக்க விழாவை நடத்திவிட்டு அமருகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இல்லாமல், தொடர்ந்து அந்த திட்டப்பணிகளை நேர்த்தியோடும் குறிப்பிட்ட கால அளவுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 70-75 சதவீதம் அளவிற்கு அடுத்தாண்டு (2026) ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கான முனைப்புடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT