தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் அகற்றும் பணியை அமைச்சர் மரிய வில்சன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இன்று (09.09.2026) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களுக்கான கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148க்குட்பட்ட புவனேஸ்வரி நகரில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய் தொடங்கும் இடத்தினைப் பார்வையிட்டு, இக்கால்வாயில் மழை வெள்ள நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி, வண்டல் மண் தூர்வாரிடவும், தடுப்புச் சுவர் கட்டுதல் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ப.ரேவந்த் சரண், மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ராஜ்குமார், என்.தட்சணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வி.கிரிதரண் மற்றும் நீர்வளத்துரை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT