சென்னை,
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று (29.08.2026) திரு.வி..க. நகர் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் பி.கணேசன், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட யானைகவுனி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-73க்குட்பட்ட ஸ்டிபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் உள்ள மோட்டார் பம்புடன் கூடிய மதகு, வார்டு-75க்குட்பட்ட எஸ்எஸ் புரம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திடவும், பம்புடன் கூடிய மதகினை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
அண்ணாநகர் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-99க்குட்பட்ட பிரிக்லின் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஒட்டேரி நல்லா கால்வாயில் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.