சென்னை,
கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் பிளஸ் 2 தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து கருத்து தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.