சென்னை,
வடசென்னையில் பிரபல தாதாவாக வலம் வருபவர், எண்ணூர் தனசேகரன். இவரது மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், போலீசார் அவரை கைது செய்ய தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர விடுதியில் எண்ணூர் தனசேகரன் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நட்சத்திர விடுதிக்கு போலீசார் சென்றனர். எண்ணூர் தனசேகரனிடம் துப்பாக்கி இருப்பதை தெரிந்துகொண்ட போலீசார், துப்பாக்கியுடன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி முனையில் எண்ணூர் தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கார், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ஒப்பந்ததாரர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், எண்ணூர் தனசேகரன் தலைமறைவாகி இருந்தார். இந்த வழக்கில் எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.