தமிழக செய்திகள்

செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டப்பட்டனர். அங்கேயும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 4-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT