கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காணிக்கை நகையை அணிந்துகொண்ட விவகாரம்: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி பணியிடை நீக்கம்

விசாரணையில் காணிக்கை நகையை பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்தது உறுதி செய்யப்பட்டது.

நெல்லை,

பக்தர் காணிக்கையாக அளித்த நகையை அணிந்த விவகாரம் தொடர்பாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஐம்பொன் நகை காணிக்கை

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர் கடந்த மே மாதம் சுமார் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் நகையை காணிக்கையாக வழங்கினார்.

அதில் சொரிமுத்து அய்யனார் பூரண புஷ்பக்கல் அம்பிகை உருவம் கொண்ட பதக்கமும் இடம்பெற்றிருந்தது. கோவிலில் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்தபோது நகையில் லேசான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே நகையை சரிசெய்து கொடுப்பதற்காக அந்த கோவிலில் பணிபுரியும் பிச்சையா என்ற பூசாரி, மற்றொரு பூசாரியான செந்தில் என்பவரிடம் ஒப்படைத்தார்.

நகையை அணிந்த பூசாரி

கடந்த 12-ந்தேதி சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. அப்போது அந்த காணிக்கை நகையை பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சி வைரலாக பரவிய நிலையில், காணிக்கையாக அளித்த ஐம்பொன் நகையை பூசாரி ஒருவர் அணிந்திருப்பதை பார்த்த திண்டுக்கல் பக்தர் தாமோதரன் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே சமூகவலைதளம் மூலமாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் கோவில் நிர்வாக அலுவலர் இளங்குமரனுக்கு தெரியவந்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

பணியிடை நீக்கம்

விசாரணையில் காணிக்கை நகையை செந்தில் தனது கழுத்தில் அணிந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின் பேரில் பூசாரி செந்திலை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பக்தரிடம் இருந்து நகையை பெற்றுக்கொண்டு, கோவில் நிர்வாகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நகை சேதம டைந்ததாக கூறி அதனை சரி செய்வதற்காக வேறு ஒருவரிடம் ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் பூசாரி பிச்சையா உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஐம்பொன் நகை தற்போது கோவில் நிர்வாகத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. உதவி ஆணையரும், தக்காருமான சுப்புலட்சுமி, சரக ஆய்வாளர் கோமதி, செயல் அலுவலர் இளங்குமரன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.