ஸ்ரீவில்லிபுத்தூர்,
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் ரோட்டில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே அந்த காரில் வந்தவர் அப்துல் ஜலீல் (வயது 45) என்பதும், அவர் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வேட்பாளரான இவருக்கு நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்து இருப்பதால், அதிகாரிகளிடம் பணத்தை திரும்ப கேட்டு மனு கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரி பாலமுருகன் விசாரணை நடத்தி நட்சத்திர அந்தஸ்து உள்ள பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வைத்துக் கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.