கடையம்:
கடையம் அருகே, மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மூதாட்டி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்தாம்கட்டளை பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து. இவருடைய மனைவி அன்னம் (வயது 90). இவர்களது மகன் கண்ணன்.
அன்னத்தின் அண்ணன் மகள் கவிதாவுக்கும், கண்ணனுக்கும் திருமணம் நடந்து வசித்து வந்தனர். இந்தநிலையில் கவிதாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருமகள் கவிதாவை மாமியார் அன்னம் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
தீக்குளித்து தற்கொலை
தன்னால்தான் தன் மருமகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது, என அன்னம் கூறிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் அன்னம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்னம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.