தமிழக செய்திகள்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று காணொலி மாநாடு - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மீட்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் காணொலியில் இன்று(சனிக்கிழமை) மாநாடு நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 6-ந் தேதி (இன்று) காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றுவார். தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டை அவர் வெளியிடுவார்.

இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சி.ஐ.ஐ. தலைவர் ஹரி மு.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் ஆர்.தினேஷ், பி.சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணை தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது