சென்னை,
நாளை (26.08.2026) மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி தமிழக சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.
பின்னர் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது. அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டசபையில் இயற்கை வளங்கள்துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்கினார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
காரசார விவாதங்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொழில்துறை, சுற்றுசூழல் துறை கனிவனத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டசபையின் இன்றைய நிகழச்சிகள் சரியாக இரவு 7.13 மணிக்கு நிறைவுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு கூடிய சபை இடைவிடாமல் சுமார் 10 மணி நேரம் நடந்தது.
இந்த சூழலில் நாளை மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டசபை நாளை மறுநாள் (27-ந் தேதி) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.