தமிழக செய்திகள்

ஒரு நாள் பரபரப்பு... டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி. உதயகுமார் பதில்

நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சென்று பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக இணைந்து வந்து வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பாஜக மாவட்ட அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் மூவரும் இணைந்து வந்து மரியாதை செலுத்தியது குறித்து ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.பி. உதயகுமார், "ஒரு நாள் பரபரப்பு அது. நீங்கள் அதை கூடுதல் பரபரப்பு பண்ணாமல் இருந்தால் எல்லாம் சரியாகி விடும். இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. இது ஒன்றும் புதிதல்ல" என்று கூறினார்.

SCROLL FOR NEXT