பழனி,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, அலகு குத்தி முருகனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் கோவிலில் உள்ள தங்கரதம், தங்கத்தொட்டில் சேவைகளிலும் பங்கெடுத்து வழிபடுகின்றனர். இதற்காக கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முதல்நிலை கோவில்களில் பக்தர்கள் எளிதான முறையில் சேவைகளை பெறுவதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பழனி முருகன் கோவிலில் கால பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்வது. மின் இழுவை ரெயிலில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ரோப்காரில் பயணம் செய்வதற்கான ஆன்லைனில் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் சென்று ஒதுக்கீடு செய்த நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பக்தர் ஒருவருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றுவர ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை 50 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் பயணிக்க உள்ளனர்.
அதேபோல் கோவிலில் நடைபெறும் 6 கால பூஜையில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு வசதியும் சோதனை முறையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பூஜைக்கு 5 டிக்கெட் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் கோவில் தங்கும் விடுதிக்கான அறைகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் தொடங்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.