தமிழக செய்திகள்

மின்சாரதுறை பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணியிட மாற்ற கலந்தாய்வு

பணியிடத்தில் ஒரு ஆண்டை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே பணியிட மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆன்லைனில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய விதிமுறைகள் மற்றும் தகவல் களை மின்சார வாரியம் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

அதில் "பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் எச்.ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் போர்டலில் மட்டுமே பெறப்படும். பணியிட மாறுதல்கள் அனைத்தும் முற்றிலும் வெளிப்படையான ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடக்கும்.

பணியிடத்தில் ஒரு ஆண்டை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளது. இந்த நடைமுறையின்படி, பணியிட மாறுதலுக்கான உத்தரவுகள் ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.

பணியாளர்கள் விரும்பும் இடங்களை வெளிப்படையாக தேர்ந்தெடுக்க, கணினி மற்றும் இணையம் வாயிலான கலந்தாய்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இனி கலந்தாய்வு மூலமே பணி மாறுதல்கள் நடக்கும்" என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.