தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் விற்கப்படும் மளிகை பொருட்களுக்கு ஆன்லைன் டெண்டர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பணியாளர்கள் நன்றி

மளிகை பொருட்கள் கொள்முதலுக்கு, ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 34,908 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் மாதம் தோறும் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு, அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோக, மஞ்சள் பொடி, சேமியா, பெருங்காயத்தூள், உப்பு, வெந்தயம், சீரகம், குளியல் சோப்பு, சலவை சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த மளிகை பொருட்கள் எல்லாம் கட்டாயத்தின் பேரில் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன. இதனால், பல நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த ஆட்சி காலத்தில், இந்த மளிகை பொருட்கள் எல்லாம் 'கூட்டு கொள்முதல் குழு' மூலம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் வாங்கப்பட்டது. இதன் மூலம் அதிகார மட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளுடன், ஆளும் தரப்புக்கு நெருக்கமான நிழல் மனிதர்களுமே ஆதாயம் அடைந்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மளிகை பொருட்கள் கொள்முதலுக்கு, ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

​தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருட்களின் கொள்முதல் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்றும், தரமான பொருட்கள் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

கடந்த காலங்களில், அதிகார மட்டத்தில் உள்ள ஒரு சில உயர் அதிகாரிகளுடன், ஆளும் தரப்புக்கு நெருக்கமான நிழல் மனிதர்கள் சிலர் கைகோர்த்துக்கொண்டு, 'கூட்டு கொள்முதல் குழு' என்ற பெயரில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி தங்களுக்கு வேண்டப்பட்ட டெண்டர்தாரர்களுக்கு மட்டுமே சாதகமாகச் செயல்பட்டு வந்தனர்.

சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இத்தகைய திரைமறைவு மளிகை பொருள் கொள்முதல் நடைமுறைகள் அரங்கேறின. ரேஷன் கடைகளுக்கு இவ்வளவு பொருட்களை அனுப்பியே தீர வேண்டும் என்று கட்டாய 'டார்கெட்' நிர்ணயம் செய்யப்பட்டது.

​அதிகார பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த முறைகேடுகளின் மூலம் கமிஷன் தொகை யாருக்குச் சென்றது, யார் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை விட, கடைக்கோடியில் உழைக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு, பலியாடாக்கப்பட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.

பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டு, விற்காமல் தேங்கிய பொருட்களுக்கான தொகையையும், காலாவதியான பொருட்களுக்கான தொகையையும் ஏழைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் இருந்து கட்டாய வசூல் செய்யும் அவல நிலை நீடித்து வந்தது.

அதிகார வர்க்கமும், சில அரசியல் சக்திகளும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இத்தகைய பிரம்மாண்ட கூட்டு ஊழலுக்கும், பணியாளர்களின் நீண்டகால இன்னல்களுக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அதிரடி நடவடிக்கையாகும்.

​கூட்டுறவு அங்காடிகளுக்கான மளிகைப் பொருட்கள் இனி "ஆன்லைன் டெண்டர்" மூலம் மட்டுமே வெளிப்படையாகக் கொள்முதல் செய்யப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜின் அறிவிப்பு, எங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும்.

​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்ததில், கூட்டுறவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவின் பங்கும், அர்ப்பணிப்பும் நிரம்ப உண்டு. நேர்மைக்கும், துணிச்சலான நிர்வாகத்திற்கும் பெயர் பெற்ற அவர், இந்தத் துறையை மேலும் சீர்படுத்துவார் என்ற மிகப்பெரிய நம்பிக்கை ரேஷன் கடை பணியாளர்கள் மத்தியில் இன்று ஆழமாக எழுந்துள்ளது.

வெளிப்படைத்தன்மையோடு தரமான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வெளி மார்க்கெட் விலையை விடக் மிகக் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் விற்கப்பட்டால், கூட்டுறவுத் துறை மிகப்பெரிய வணிகப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சலான முடிவை எடுத்துள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜூக்கும், அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.