கோபிசெட்டிப்பாளையம்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதிஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து கோபிசெட்டிப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றிய பாஜக அரசு ஏதாவது திட்டங்களை தமிழகத்திற்கு செய்கிறார்களா? தேர்தல் தேதி அறிவித்தபின் பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு வாரமும் தமிழகத்திற்கு வருகிறார். ஆனால் நாம் கேட்கும் நிதி ஏதும் தருவது இல்லை. கல்விக்கான நிதி ரூ.3,500 கோடி தராமல் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் தான் கல்விக்கான நிதியை தருவோம் என்று சொல்லி வருகிறது.
மீண்டும் தமிழகத்தில் இந்தியை கொண்டுவர பாஜக அரசு முயற்சிக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.அந்த மசோதாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதன் முதலில் எதிர்த்தார். தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.