தமிழக செய்திகள்

நாளை தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி; 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுதாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கிரேன் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

லகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த மலர் கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் மற்றும் சுற்றுப்பாதை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நாளை தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.கண்காட்சியை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், அவர்களது வசதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுப்பாதை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மலர் கண்காட்சி தொடங்குவதையொட்டி கூடுதல் சுற்றுப்பாதை பஸ்கள் மற்றும் “பார்க் அண்ட் ரைடு” பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், கண்காட்சியை பார்த்துவிட்டு ஊர் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு மற்றும் திருப்பூரில் இருந்தும் ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களில் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகளில் பஸ்கள் பழுதாகி நின்றால் உடனடியாக சரிசெய்யும் வகையில் மொபைல் பழுதுபார்ப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுதாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கிரேன் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது