பயணிகள் கூட்டம்
வருகிற 17-ந் தேதி சுபமுகூர்த்த தினம் மற்றும் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் (வெள்ளி, சனிக்கிழமை) அன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சீபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப பஸ்கள்
அதேபோல் மேற்கண்ட விடுமுறையை முடித்து பொதுமக்கள், மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக வருகிற 18-ந் தேதியன்று (திங்கட்கிழமை) கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த தகவல் அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.