காட்பாடி,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்து?
பதில்:- தி.மு.க.வில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு, வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு.
கேள்வி:- த.வெ.க ஆட்சியின் 100 நாள் ஆட்சி குறித்து உங்கள் கருத்து?
பதில்:- என்னுடைய அரசியல் வாழ்வில் இந்த ஆட்சி 100 நாட்களில் எதையும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். புதியதாக எதையும் செய்யவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட 100 நாட்களில் வரவில்லை.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். எழுதி தருவதை தான் படிக்கிறார்கள். கோரிக்கைகள் குறித்தும், அந்த துறைகள் குறித்தும் எதுவுமே பேசுவதில்லை. மானிய கோரிக்கை விவாதத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள், குறைகளை கூறுவார்கள். அதை அமைச்சர்கள் குறித்துக் கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்க வேண்டும், அதுதான் முறை. நான் வகித்த இலாகாவான நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தன்னுடைய இலாகா குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, அவரது தலைவர் குறித்து மட்டுமே பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.