சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 7 ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடானது.
தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய அதிகனமழையால், சென்னையில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடின.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ள நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.