தமிழக செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை; நயினார் நாகேந்திரன் கண்டனம்

700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தை அமல்படுத்த அரசு முன்மொழிவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரசுப் பள்ளி மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது!

எண்ணிக்கை குறைப்பு

அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, முந்தைய திமுக அரசு பிறப்பித்த அதே அரசாணையை தற்போதைய தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. அதிகளவிலான கட்டணம் செலுத்தி தனியாரிடம் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களைத் துல்லியமாகக் கணித்து, போட்டிகளில் அவர்களின் பங்கேற்றலை உறுதி செய்யும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை.

தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700 மாணவர்களுக்கு கீழ் இருக்கும் சில கிராமப்புற பள்ளிகளின் மீது உடற்கல்வி ஆசிரியரின் நிழல் கூட படாமல் போய்விடும் என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா?

வலியுறுத்தல்..

கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.