நெல்லை,
திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வளரட்டும் என்ற தலைப்பில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சட்டசபை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு சந்தித்த சட்டசபைதேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என 11 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆணவப்போக்கால் இந்த விதியில் திருத்தங்களைக் கொண்டுவந்து, தொடர்ந்து 10 ஆண்டு காலமாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார்.
அதிமுகவை குழிதோண்டி புதைத்த பாவம் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் ஆர்.பி. உதயகுமாருக்கும் சென்று சேரும். மக்களவைத் தேர்தலில் என்னைத் தோற்கடிக்க 6 ஓ.பன்னீர் செல்வங்களை அவர் நிறுத்தினார்.
தர்ம யுத்தத்தில் தொடங்கிய என்னுடைய வலிமையை அறிந்துகொள்வதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; விசில் சத்தம் கேட்டால் வெற்றி நிச்சயம். உலகை ஆளும் 9 கோள்களில் யாராலும் வெல்ல முடியாதது சூரியன்.
மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்படவில்லை. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம்.
வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். இளைஞர்களுக்கு மாவட்டத்திற்குள்ளாகவே வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். திராவிட மாடலின் ஆட்சி வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.