தமிழக செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்!

முகூர்த்த நாட்களில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

திருப்போரூர்,

திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் கிருத்திகை, விசேஷ தினங்கள். செவ்வாய்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் முகூர்த்த நாட்களில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

70-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருப்போரூர் முருகன் கோவிலில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் மாடவீதிகளில் 15-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்துக்கு கார், வேன், மோட்டார் சைக்கிள் என வருகை தந்தவர்கள் தங்களது வாகனங்களை வழியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் மாடவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழி மற்றும் கோவில் வெளிப்புற வளாக பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மாடவீதிகளில் உள்ள பல திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. முகூர்த்த நாட்களில் மாட வீதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT