தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவில் செல்வோர் கவனத்திற்கு...வெளியான முக்கிய அறிவிப்பு

மின் இழுவை ரெயில், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோயில் ரோப் கார் சேவை இன்று (ஜூலை 20ஆம் தேதி) முதல் 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோப்கார் சேவை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.

பராமரிப்பு பணி

பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 20) முதல் செப்டம்பர் 14 வரை 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலையேறுவதற்கு படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரெயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.