தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவில்: உண்டியல் காணிக்கையில் புதிய உச்சம்

பழனி முருகன் கோவில் வரலாற்றில் இதுவரை ஒருநாளில் எண்ணப்பட்ட காணிக்கை தொகையிலேயே நேற்று கிடைத்த தொகையே அதிகமானது.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம்,வெள்ளி நகைகள் என அனைத்தும் கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இந்தநிலையில் காணிக்கை எண்ணிக்கை முடிவில் ரூ.4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 காணிக்கையாக கிடைத்தது. இதுதவிர தங்கம் 748 கிராம், வெள்ளி 12 கிலோ 893 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1,448-ம் கிடைத்தன. இதற்கிடையே பழனி முருகன் கோவில் வரலாற்றில் இதுவரை ஒருநாளில் எண்ணப்பட்ட காணிக்கை தொகையிலேயே நேற்று கிடைத்த தொகையே அதிகமானது. இதற்கு முன்பு 27-3-25 அன்று ரூ.3 கோடியே 73 லட்சத்து 88 ஆயிரத்து 727 கிடைத்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.