தமிழக செய்திகள்

பழனி கோவில் நில விவகாரம்: பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு

விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

சென்னை,

பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசார ணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள்.

மேலும், பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய இருக்கின்றனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.