தமிழக செய்திகள்

பழனி கோவில் நில மோசடி: “மிகப்பெரிய சதி..குற்றவாளியை மறைக்க முயற்சி” - தி.மு.க. குற்றச்சாட்டு

பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி என்று தி.மு.க. சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.

ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனி யார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தி.மு.க. குற்றச்சாட்டு

இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி தொடர்பாக மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்றும் குற்றவாளியை மறைக்க முயற்சி நடப்பதாகவும் தி.மு.க. சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார்.

திட்டமிட்ட சதி

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

பழனி நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம் ஏற்புடையதல்ல. திட்டமிட்ட சதி நடந்துள்ளது. தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?

பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.

சமூக வலைதளத்தில் பேசியவர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

முதல்-அமைச்சர் விஜய்

பழனி கோயில் நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத் துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் முதல்-அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.