தமிழக செய்திகள்

பழனி கோவில் ரூ.100 கோடி நிலம் மோசடி விவகாரம்: பத்திரப்பதிவு ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி புகார் விவகாரத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சேதுபதி, வெள்ளத்துரை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை பழனி கோவில் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஆனால், மேற்கண்ட 1.35 ஏக்கர் நிலத்துக்கு சேதுபதி, வெள்ளத்துரை தாங்கள்தான் உரிமையாளர்கள் என்றும், அந்த நிலத்தை பழனி சார்பதிவாளர் கிரையம் செய்ய மறுக்கிறார் எனவும் கூறி அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், மேற்கண்ட சொத்து தொடர்பாக நடந்த சிவில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், வேறு எந்த பிரச்சினையும் அந்த சொத்தில் இல்லை எனவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த சொத்தை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரின் நடவடிக்கை தன்னிச்சையானது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கும் கருத்து ஏற்கப்படுகிறது. சார்பதிவாள ரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பளித்தார்.

செல்லாது

இதையடுத்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் அந்த 1.35 ஏக்கர் நிலத்தை சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோர் சேர்ந்து வேறு நபர் களுக்கு கடந்த 6-ந் தேதி கிரையம் செய்து உள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறை யீடு மனுவை மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, மத நிறுவ னங்களின் சொத்துகளை பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பதிவுத்துறை சார்பில் கேட்டு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தனிநீதிபதியிடம் உண்மைகளை மறைத்து உத்தரவுகள் பெறப்பட்டு இருப்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து மேற்கண்ட மடத்தின் சொத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது.இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த நில முறைகேடு வழக்கு தொடர்பான புலன்விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சேதுபதி, வெள்ளத்துரை சார்பில் வக்கீல் ஷ்யாம் கோபால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் பிறப்பித்துள்ள ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இதனிடையே, இந்த மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தை கேட்க கோரி பழனிமுருகன் கோவில் சார்பில் தமிழ்நாடு அரசின் வக்கீல் பி.கருணாகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.