காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வின்போது ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பெண் தெய்வத்தின் சிலை ஒன்று கவனிப்பாரற்று கிடப்பதை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது அந்த சிலை தனிக்கல்லில் 80 செ.மீ. உயரமும், 42 செ.மீ.அகலமும் உடையதாக கிழக்கு திசையை நோக்கி காணப்பட்டது. விஷ்ணு துர்க்கை என்று கண்டறியப்பட்ட அந்த சிலை நின்ற நிலையில் 4 கைகளுடன் காணப்பட்டது.வலது முன்கை சிதைந்த நிலையில் அபய முத்திரை காட்டியும், பின்கை சக்கரத்துடன் காணப்பட்டது.
இடது முன்கை இடுப்பில் வைத்திருக்க, பின்கை சங்குடனும் உள்ளது. மார்பு மற்றும் இடைப்பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்டு ஆடை அணிந்துள்ளது. தலையில் கிரீடமும், கழுத்து, மார்பு, காதுகள், தோள்கள், கைகள் மற்றும் கால்களில் அணிகலன்களும் காணப்பட்டன. முகம் சிறிது மழுங்கிய நிலையில் காணப்பட்டது.
கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் காணப்படாத இந்த சிலை பல்லவர் காலமான 9-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. கண்டெடுக்கப்பட்ட சிலையின் உண்மைத்தன்மையை வரலாற்று ஆய்வாளர் அன்பழகன், காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் உறுதி செய்தனர்.