சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த மார்ச் 24-ந் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்தார். 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்ததின் விளைவைத்தான் இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
தற்போது 9 நிமிடங்கள் விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தியில் ஒளியை ஏற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி செய்வதன் மூலமாக கொரோனா நோய் ஒழிப்பிற்கு எந்த வகையில் உதவப்போகிறது? கொரோனா நோய் ஒழிப்பிற்கு தேவையான பரிசோதனை மையங்கள், சுவாச கருவிகள், முககவசங்கள் பற்றாக்குறையால் நாட்டுமக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறபோது மெழுகுவர்த்தியை ஏற்றுவதனால் என்ன பயன் ஏற்பட போகிறது?
ஊரடங்கு உத்தரவால் ரெயில், பஸ் போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான மைல்கள் நடைபயணமாகவே தங்களது ஊருக்கு செல்லவேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டது. மராட்டிய மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி நடைபயணமாக வந்த 21 வயது மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். எந்த தவறையும் செய்யாத மாணவர் இறப்பு போன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.