தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கல்குமி கிராமத்தை சேர்ந்த பெத்திலேகமணி மகன் சாலமோன்ராஜா (வயது 66). பனை ஏறும் தொழிலாளியான இவர் தனது மனைவி ஐனீஷ்மரியாளுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம் போல் பனை தொழிலுக்கு சென்ற சாலமோன்ராஜா, மதிய உணவிற்காக நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஐனீஷ்மரியாள் அவரை தேடி பனை தோப்பிற்கு சென்றுள்ளார்.
அப்போது சாலமோன்ராஜா மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விளாத்திகுளம் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.