தமிழக செய்திகள்

புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தொடங்கினார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும் எந்தவித முடிவும் எடுக்காமல் இபிஎஸ் காலம் தாழ்த்தி வந்தார்.

எந்தவித முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்துவதால் பிப்.19 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் புதிய கட்சி உதயமாகிறது எனவும் இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்கள் அனைவரும் ஒபிஎஸ் அணியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலகுவதாகவும் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரும், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய முக்கிய தலைவர்களுடன் பயணித்தவருமான மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தொடங்கினார்.

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது. ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம். வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்தது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.