கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (38 வயது). லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (36 வயது). இந்த தம்பதிக்கு திவாகர்(13) என்ற மகன் இருந்தான். இவன், பெரியவடவாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் படிக்காமல், நண்பர்களுடன் சுற்றியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து திவாகர் சுற்றியுள்ளான். அதன்பிறகு பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அவன் வீட்டிற்கு செல்லவில்லை. இரவு முழுவதும் மகன் வீட்டிற்கு வராததால் நேற்று காலையில் பெற்றோர் தேடினர். அவனது நண்பர்களிடமும் விசாரித்தனர்.
இதனிடையே பூவனூர் ரெயில் நிலையம் அருகில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது திவாகர் என்பது தெரிந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், மாணவன் திவாகர் தலை நசுங்கி இறந்து கிடந்ததை வைத்து பார்க்கும் போது ரெயில் வருவதை அறிந்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.