சென்னை,
தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று ஒரு பொது மேடையில் கேலி, கிண்டல் செய்து, மிமிக்ரி நடிகரைப் போலக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றியிருக்கும் அரசியல் கோமாளி ராகும் காந்தியின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி இதுபோல் பொது மேடைகளில் நடந்துகொள்வது முதல் முறையல்ல; தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் வெளிப்பாடாகத் தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வருகிறார். உண்மையில் ராகுல் காந்தி என்பவர் ஒரு முழுநேர மக்கள் தலைவரே கிடையாது; அவர் ஒரு 'பார்ட் டைம் அரசியல்வாதி'. ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டவர்.
எப்போதாவது அரசியல் மேடைகளுக்கு வந்து இதுபோன்று மலிவான நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, அடுத்த நாளே தனது உல்லாச வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் ஒருவரை இந்திய மக்கள் எப்படித் தங்கள் தலைவராக ஏற்பார்கள்? அதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல், அந்த விரக்தியையும் வெறுப்பையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது இம்முறையில் காட்டிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கண்ணியத்தை மறந்து, தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும். மேடைகளில் அரங்கேற்றும் மலிவான கேலிக்கூத்துகள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிடலாம் என்ற அவரின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே இனியாவது சுயபரிசோதனை செய்துகொண்டு அவர் பொறுப்புடன் செயல்படத் தவறினால், அவரது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கோமாளி வேடங்களே மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.