தமிழக செய்திகள்

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு - முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பாடகி எஸ்.ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

“இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.