தாம்பரம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலையான சம்பவத்தில் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், சேலையூர் அருகே செம்பாக்கம் வி.ஜி.பி. நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 10-ந்தேதி அருண்குமாரை மீண்டும் அதே போதை மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து வைத்ததாகவும், அவர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டபோது கட்டிலில் கட்டிப்போட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அருண்குமார் மயக்கமடைந்த நிலையில், அவரை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு ஊழியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருண்குமாரை கட்டிலில் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் (36), அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (40), குணசீலன் (43) ராஜாசுதாகர் (41) ராஜ்கமல் (33) ஆகிய 5 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.