கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் கரிசல் மண் பூமி என்பதால் இப்பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.
இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் உலகளவில் பிரசித்தி பெற்றது. சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாக சுமார் 120 இடங்களில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டத்தில் இடம்பெற வேண்டும். வந்தேபாரத் ரெயில் உணவு பட்டியலிலும் இடம்பெற வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் உணவு பொருட்களை வந்தே பாரத் ரெயில்களின் உணவு பட்டியலில் இணைக்க வேண்டும்.
அப்போது தான் இந்த பொருட்களின் பெருமை, வரலாறு, அதன் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெரியும். மேலும் பள்ளிக்கூடங்களில் தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம், அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு விழாக்களில் சுவை மற்றும் சத்துள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.