சென்னை,
ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.
தமிழ்நாட்டில் 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற, உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் (சிறிஷி) வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவதற்காக 16.06.2026 அன்று அரசாணை 111 பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 01.01.2026 முதல் இடைக்கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 31.12.2025 வரை ஓய்வு பெற்ற 46 ஆயிரம் பேருக்கு இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு, 01.04.2003 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ.10,000-த்தை மாதம்தோறும் வழங்கிட வேண்டும்.
ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது கடந்த கால உழைப்புச் சக்தியை இச்சமூகத்திற்கு வழங்கியவர்களுக்கு, சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இச் சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்விற்கு ஓய்வூதியம் அவசியம் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. எனவே, இடைக்கால ஓய்வூதியத்தை, இவ்வூழியர்களுக்கு வழங்குவதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அது மட்டுமின்றி இந்த பணியாளர்களில் ஏறத்தாழ 7864 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு மரணமடைந்தவர்களின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.