தமிழக செய்திகள்

மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

இன்றைய இளைஞர்களுக்கு புரியவுமில்லை, தெரியவுமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநில முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த திமுக 59 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார்.

மக்கள் தவறு செய்துவிட்டனர்

இந்நிலையில், சென்னை திருவான்மையூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தின் படித்தவர்கள், பட்டதாரிகள் அத்திப்பூ பூத்தார் போல் இருப்பார்கள். ஆனால் தற்போது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான். இந்த நிலைக்கு வருவதற்கு யார் காரணம் என்பதை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அது புரியவுமில்லை, தெரியவுமில்லை.

ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு அது ஏமாற்றமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர். அது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.