தமிழக செய்திகள்

தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி வருகிற 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, மார்க்கண்டேயனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தனியார் ஆங்கில நாளிதழின் இன்றைய தலையங்கம்.

நம் முதல்-அமைச்சருக்குப் புரிவதுபோல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.