மன்னார்குடி:
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மன்னார்குடி பஸ் நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மன்னார்குடி நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக "என் குப்பை என் பொறுப்பு" எனும் தலைப்பில் துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர், நகர சுகாதார அலுவலர் டாக்டர் கஸ்தூரிபாய் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மன்னார்குடியின் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.