சென்னை,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், இந்திய ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து பிரமாண்ட மக்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு கவர்னர் ரவி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக செய்தியில், பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுத படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுத படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணை நிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.