பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள கொளக்காநத்தம் காலனி தெருவை சேர்ந்த அண்ணாதுரை (வயது 50), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களது மகன் ராஜதுரை(30), டிரைவர். இவரது மனைவி தீபா.
கடந்த 28-ம் தேதி தந்தை, மகன் 2 பேரும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அண்ணாதுரை, தனது மகன் ராஜதுரையிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றி வருகிறாய்? என கேட்டுள்ளார். இதனால் தந்தை, மகன் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மதுபோதையில் இருந்த ராஜதுரை அங்கிருந்த கூர்மையான கம்பியை எடுத்து தனது தந்தையின் நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாதுரை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.