சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பெரம்பூர், முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவினை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்கு உட்பட்ட, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் (STEM Park) உள்ள டிஜிட்டல் கோளரங்கம், அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்.
இந்த பூங்காவானது மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் 11,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் டிஜிட்டல் கோளரங்கம், நிறை மற்றும் மந்தநிலை (Mass and Inertia), வாட்டர் ஜெட் எரிபொருள், காந்தத்துடன் விளையாடுதல், சைன் அலை, சைக்ளோடிகல் பாதை (Cyclodical Path), நியூட்டனின் 3-வது விதி, படிக அமைப்பு, கணித சிற்பம், டி.என்.ஏ. மாதிரி, 3டி ஊசல் காசியன் தேற்றம், ஹைப்சோமீட்டர், ப்ரிஹோமேசியன் கியர் ரயில், சோலார் வாட்டர் ஹீட்டர், சூரிய சக்தியில் இயங்கும் ரேடியோ, இசைக் குழாய்கள், அலை இயக்கம், சந்திராயன், மங்கள்யான் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் மேயர் பிரியா பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பூங்காவில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் மேயர் மரக்கன்றினை நட்டார். பின்னர், பூங்காவினை பராமரித்திடவும், சென்னை பள்ளி மாணவர்களை தினசரி அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்கு கல்விச் சுற்றுலா போல் அழைத்து வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.