சென்னை,
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
'மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை அடியோடு மறுக்கிறோம்' என்று சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடான செங்கற்பட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த சமத்துவக் கோட்பாட்டை தன் வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்து, தமிழக மக்கள் தன்மானத்துடன் வாழப் பேரொளியாய் வழிகாட்டிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று.
சமத்துவச் சிந்தனையை மக்கள் மயமாக்கிய பேராளுமை. சமூகநீதிக்காகச் சளைக்காமல் போராடி அரசியலமைப்பு முதல் திருத்தத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்த துணிச்சல்காரர். பெண் விடுதலைக்காக முன்னின்று, 'மானுட சமத்துவத்தின் முதல் படி ஆண்-பெண் சமமென்ற சமூகம்' என்று கூறிய அறத்தின் குரல். இந்தி மொழி ஆதிக்கத்தைக் கண்டித்த போராளி. 'சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு' என்று அறிவித்த சுடரொளி.
சாதி மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான கொள்கை அரணாக நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கும் தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம். 'மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்' வழியில் சமரசமின்றி பயணிப்போம் என்று உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.